வரி வசூலில் ஈரோடு மாநகராட்சிக்கு 3வது இடம்: ஆணையாளர் தகவல்!
தமிழ்நாட்டில் வரி வசூலித்த மாநகராட்சி பட்டியலில் ஈரோடு 3வது இடத்தை பிடித்துள்ளதாக ஆணையாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.;
தமிழ்நாட்டில் வரி வசூலித்த மாநகராட்சி பட்டியலில் ஈரோடு 3வது இடத்தை பிடித்துள்ளதாக ஆணையாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டில் சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் ஆக மொத்தம் 4,27,338 வரி வதிப்புகள் உள்ளது.
அதற்கான வருடாந்திர நடப்புக் கேட்புத் தொகை ரூ.106.87 கோடி ஆகும். அதில் ரூ.87.19 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்த வசூல் சதவீதம் 81.58 ஆகும். தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் கீழ் உள்ள 24 மாநகராட்சிகளில், ஈரோடு மாநகராட்சி சிறப்பான முறையில் வரி வசூல் செய்து 3-ம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈரோடு மாநகராட்சிக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரி செலுத்திய அனைத்து வரிதாரர்களுக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், 2025-26ம் ஆண்டிற்குரிய சொத்துவரித் தொகையினை வரும் 30.04.2025க்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகை பெற்றுக் கொள்ளுமாறு ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் (பொ) தனலட்சுமி தெரிவித்துள்ளார்.