ஈரோடு உழவர் சந்தையில் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Update: 2024-03-31 02:15 GMT

ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின். உடன், அமைச்சர் முத்துசாமி உள்ளார்.

ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் நடந்து சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்ததுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சேலத்தில் நேற்று (30ம் தேதி) சனிக்கிழமை மாலை ஐஎன்டிஐஏ கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இரவில் ஈரோடு வந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள சக்தி சுகர்ஸ் பயணியர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுத்தார்.

இந்நிலையில், இன்று (31ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை முதலமைச்சர் ஸ்டாலின் டி-சர்ட், பேண்ட் அணிந்தவாறு ஈரோடு சம்பத்நகரில் உள்ள உழவர் சந்தைக்கு  வந்தார். பின்னர் அவர் நடந்து சென்று சாலையோர காய்கறி வியாபாரிகளிடம் திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்பொழுது ஏராளமான ஆண்களும் பெண்களும் அவருடன் கை குலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர். சிலர் எலுமிச்சம் பழங்கள், வாழைப்பழங்கள் போன்ற கனி வகைகளை அவருக்கு பரிசாக வழங்கினர்.  அவரிடம் ஒரு பெண்மணி "நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் சார்" என்று பாராட்டிய போது அவர் சிரித்தபடியே கை குலுக்கினார்.

ஒரு சிறுமி தாத்தா "உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி" என்ற போது அவரும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து அந்த சிறுமியை அருகில் அழைத்து கை குலுக்கினார்.  சுமார் ஒரு மணி நேரம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருடன் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். 

முதல்வர் ஸ்டாலின் உழவர் சந்தை வந்திருந்த தகவலை அறிந்ததும் சம்பத் நகர், இடையங்காட்டுவலசு, முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்திருந்து ஸ்டாலினை கண்டு கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

Similar News