ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-03-05 00:15 GMT

கோப்பு படம் 

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், இரண்டு கட்டமாக  கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல்,  பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சிறப்பு முகாம்கள் நடத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 979 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News