காட்டு பன்றியை வேட்டையாட சென்றவர் மின்சாரம் தாக்கி பரிதாப உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே காட்டு பன்றியை வேட்டையாட சென்றவர் உயிரிழப்பு; மின்வேலி அமைத்த விவசாயி கைதானார்.

Update: 2021-11-21 12:30 GMT

கைது செய்யப்பட்ட நடராஜ்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் கோடேபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி துரைசாமி. இவருக்கு சொந்தமான சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தை கெம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து மல்லிகைப் பூ சாகுபடி செய்து வருகின்றார்.

இவர் விவசாயம் செய்து வரும் விளைநிலம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சரத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுப்பன்றிகளிடம் இருந்து மல்லிகைச் செடிகளை காப்பாற்ற நடராஜ் தனது தோட்டத்தை சுற்றி பவர் பேட்டரி மின்வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நடராஜ் தோட்டத்தின் அருகே உள்ள கிணற்றில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு விவசாயி நடராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்த நபர் அதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி (வயது 40) என்பதும், இவர் நேற்று முன்தினம் இரவு நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டு பன்றியை பிடிக்க நடராஜின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பவர் பேட்டரி மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாகவும் இறந்து கிடந்த மாரிச்சாமியை அதிகாலை கண்ட நடராஜ் பிரேதத்தை எடுத்துச் சென்று அருகே உள்ள கிணற்றில் வீசி மறைத்ததாகவும் தெரிய வந்தது.

உடனடியாக நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்த பவானிசாகர் காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News