ரூ. 20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி உரிமையாளர் மீட்பு: 2 பேர் கைது

புன்செய் புளியம்பட்டி அருகே ரூ. 20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி உரிமையாளரை 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

Update: 2021-10-30 01:15 GMT

பைல் படம்.

சத்தியமங்கலத்தை அடுத்த வண்டிபாளையம் குளத்துத்தோட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(36). இவர் லாரி வாடகை தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு வியாழக்கிழமை வந்த 5 பேர் கொண்ட கும்பல், போலீஸார் எனக் கூறி விசாரணை நடத்த வேண்டும் என அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் சுரேஷ் மனைவி சுகன்யாவுக்கு கைப்பேசியில் அழைத்து ரூ. 20 லட்சம் கொண்டு வர வேண்டும் என்றும், இல்லையெனில் சுரேஷைக் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸில் சுகன்யா புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மர்ம கும்பல் பேசிய கைப்பேசி எண்ணை வைத்து அவர்களது நடமாட்டத்தைக் கண்காணித்தனர். சுரேஷ் மனைவி சுகன்யா அந்த மர்ம நபரை கைப்பேசியில் அழைத்து ரூ 20 லட்சம் கொடுப்பதாகக் கூறி அன்னூர் காக்காபாளையத்துக்கு வரவழைத்தார். அப்போது சுரேஷுடன் காரில் வந்த மர்ம நபர்களை அங்கு மறைந்திருந்த போவீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதில், கோவை கணபதியைச் சேர்ந்த மணிகண்டன் (36), 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரையும் போலீஸார் பிடித்து சுரேஷை மீட்டனர். காரில் வந்த மற்ற நபர்கள் தப்பியோடினர். தப்பியோடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News