திம்பம் மலைப்பாதையில் 3 லாரிகள் பழுது: போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில், அடுத்தடுத்து 3 லாரிகள் பழுதாகி நடுரோட்டில் நின்றதால், சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-11-19 00:00 GMT

திம்மம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி.

கோவையில் இருந்து நேபாளத்துக்கு,  கன்டெய்னர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தாளவாடி அருகே உள்ள, திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில், நேற்று  மாலை 5 மணி அளவில் சென்றபோது, திரும்பமுடியாமல் நின்றது. இதனால் அந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. இதைத்தொடர்ந்து, பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இரவு 7 மணி அளவில் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

இதேபோல், பழனியில் இருந்து கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதிக்கு,  தவிடு பாரம் ஏற்றிக்கொண்டு் லாரி ஒன்று,  நேற்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 21-வது கொண்டை ஊசி வளைவில், மாலை 6 மணி அளவில் சென்றபோது பழுதாகி நின்றது. அந்த லாரியும், கிரேன் வரவழைக்கப்பட்டு், இரவு 8 மணி அளவில் தள்ளி ரோட்டோரம் நிறுத்தப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் இருந்து கோவைக்கு இரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரி, திம்பம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில், திரும்ப முடியாமல் லாரியின் டிரைவர் சிரமப்பட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாற்று டிரைவர் மூலமாக லாரியை திருப்பி சென்றபிறகு போக்குவரத்து சீரானது. திம்பம் மலைப்பாதையில் லாரி திரும்ப முடியாமல் நின்றதாலும், பழுதாகி நின்றதாலும் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News