சத்தியமங்கலம் அருகே சிறுத்தை புலி அட்டகாசம்: 2 ஆடுகள் பலி

சத்தியமங்கலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 2 ஆடுகளை சிறுத்தை புலி அடித்து கொன்றதில் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2021-11-17 14:30 GMT

பலியான ஆடுகள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்தவர்  ஞானசேகரன். இவருக்கு சொந்தமான நிலம் பெரியகுளம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலத்தில் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார். வனப்பகுதியை ஒட்டி உள்ள காலி இடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆடு , மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு ஆடுகள் திரும்பவில்லை. இதனையடுத்து மேய்ச்சல் பகுதிக்கு சென்று பார்த்தபோது இரண்டு ஆடுகள் இறந்து கிடந்தன. இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த விலங்கின் கால் தடங்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு பதிவாகி இருந்த கால் தடம் சிறுத்தையின் கால் தடம் என கண்டுபிடித்தனர். வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் ஆடு, மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தையானது, இரண்டு ஆடுகளளை அடித்து கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News