பவானி ஆற்றில் 8,000 கன அடி தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், கரையோரப் பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Update: 2021-11-08 08:45 GMT

பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று 4 ஆயிரம் கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இன்று மேலும் அதிகரித்து 6 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கி உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு  நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,757 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 6 ஆயிரத்து 500 கன அடி என மொத்தம் 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் 6,500 கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கன அடிக்கு மேல் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும் என்பதால் பவானி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பவானி கரையோரம் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News