சம்பங்கி பூ விலை வீழ்ச்சி: பூக்களை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

சத்தியமங்கலத்தில் விலை வீழ்ச்சி காரணமாக சம்பங்கி பூக்களை விவசாயிகள் குப்பையில் கொட்டினர்.

Update: 2021-10-29 13:00 GMT

குப்பையில் பூக்களை கொட்டும் விவசாயிகள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களுடைய பூக்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

இதேபோல் இந்த மார்க்கெட்டில் பூக்கள் வாங்குவதற்காக ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூரு, கொள்ளேகால், பெங்களூரு மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருவார்கள். அவ்வாறு வாங்கி செல்லப்படும் பூக்கள் கோவையில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும். ஆயுத பூஜை விழாவின் போது பூக்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஆயுத பூஜை விழா முடிந்த பின்னர் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக சம்பங்கி பூ கிலோ ஒன்று ரூ.10-க்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 

இந்நிலையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் தாங்கள் மூட்டைகளாக கட்டி சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்த  சம்பங்கி பூக்களை அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் குப்பையோடு குப்பையாக கொட்டிவிட்டு சென்று விட்டனர். 

Tags:    

Similar News