யானைகளை செல்போனில் படம் பிடிக்க வேண்டாம்: வனத்துறையினர்
காட்டு யானைகள் குட்டியுடன் நின்று வாகனங்களை வழிமறிப்பதால், யானைகளை செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.;
பைல் படம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலையில் அங்கும் இங்கும் அலைமோதுகின்றன.
சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனை சாவடி அருகே அதிகாலையில் காட்டு யானைகள் குட்டியுடன் கூட்டம் கூட்டமாக நடமாடியதோடு, சாலையில் நின்ற வாகனங்களை வழிமறித்து நின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தினர்.
யானைகள் நடமாடத்தை தங்களது செல்போனில் சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் சாலையோர வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
காட்டு யானைகள் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறும், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், சாயோரம் நிற்கும் யானைகளை செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.