பவானிசாகர் அணையிலிருந்து 11,600 கன அடி நீர் திறப்பு

பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-11-18 15:45 GMT

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், கனமழை பெய்து வருகிறது.

எனவே அணையின் நீர்மட்டம் 104.22 அடியை எட்டி உள்ளது. மேலும் அணையில் நீர் இருப்பு 32.1 டிஎம்சி ஆக உள்ளது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் இன்று காலை முதல் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் பவானி ஆற்றில் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று மாலை 4 மணி நிலவரப்படி 8,153 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் திறக்கும் அளவு 6,800 கன அடியிலிருந்து 11,600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து பவானி ஆற்றில் 9800 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 11,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் பவானிசாகர் அணை மற்றும் பவானி ஆற்றின் கரையோர கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமும் தண்டோரா மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News