செக்யூரிட்டியிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேர் கைது

கவுந்தப்பாடி அருகே செக்யூரிட்டியிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-27 03:45 GMT

கைது செய்யப்பட்ட லோகேஷ் மற்றும் பிரகாஷ்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் ஆப்பக்கூடலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 15ம் தேதி சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, பெருந்தலையூர் அருகே பைக்கில் வந்த 3 பேர் கவுந்தப்பாடி செல்ல வழி கேட்டுள்ளனர்.

அய்யாசாமி வழி கூறிக்கொண்டு இருந்தபோது, அய்யாசாமியின் பாக்கெட்டில் இருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அய்யாசாமி கவுந்தப்பாடி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் அய்யன்வலசு பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு பேரை விசாரணை செய்ததில், அய்யாசாமியிடம் செல்போன் திருடியது அவர்கள் என தெரியவந்தது. செல்போனை திருடிய விஜயமங்கலம் மூங்கில்பாளையத்தை சேர்ந்த கவின் என்கிற லோகேஷ் மற்றும் பவானி  சன்னியாசிபட்டி பகுதியை சேர்ந்த வேல்பிரகாஷ் என்கிற பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News