ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் முதல்நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-07-06 10:15 GMT

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும், 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டு வந்தன. சாதாரண நாட்களில் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை வியாபாரம் நடைபெறும். பண்டிகை, விசேஷ நாட்களில் ரூ.10 கோடி வரை வியாபாரம் நடக்கும்.

கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால், ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டன. கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 213 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 

மதுப்பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களுக்கு வேண்டிய சரக்குகளை அள்ளிச் சென்றனர். சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. சில இடங்களில் மதுபானங்கள் வாங்கிய மகிழ்ச்சியில்,  மது பிரியர்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், நேற்று ஒரே நாளில் மட்டும், ரூ.7 கோடியே 1 லட்சத்து 77 ஆயிரத்து 510 - க்கு சரக்குகள் விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக பீர் வகைகள் அதிக அளவில் விற்பனை ஆனதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைப்போல் கூட்டம் அதிகம் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும், டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News