ஜவுளித்துறை ஆலோசனை கூட்டம் : பயனாளிக்கு குறைந்தபட்சம் 20 தறி வழங்க வலியுறுத்தல்

அரசு திட்டத்தில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 8 தறி மட்டுமே வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 தறி வழங்க வேண்டும்.

Update: 2021-10-14 14:45 GMT

பைல் படம்

தில்லியில்  உள்ள ஜவுளித்துறை சார்பில், விசைத்தறி தொழில் மேம்பாடு மற்றும் குறைகளை களைவது தொடர்பான ஆலோசனை கூட்டம், காணொலி மூலம் நேற்று நடந்தது. மத்திய ஜவுளித்துறை ஆணையர் ரூப்ரஷி, ஜவுளித்துணை இணை ஆணையர் வர்மா ஆகியோர் பதிலளித்து பேசினர். தமிழகத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த விசைத்தறியாளர்கள் காணொலியில் ஆலோசனை தெரிவித்தனர்.

ஈரோட்டில் இருந்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் பேசியதாவது: கைத்தறிக்கான ரகங்களில் மாறுதல் செய்ய வேண்டும். விசைத்தறிக்கு தனி ரகங்களை ஏற்படுத்த வேண்டும். நூல் விலையை, குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறையே நிர்ணயிக்க வேண்டும். அரசு திட்டத்தில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 8 தறி மட்டுமே வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 தறி வழங்க வேண்டும். பி.எல்.ஐ. திட்டத்தில் செயற்கை இலை துணி உற்பத்தி மேம்பாட்டுக்காக, 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 100 முதல், 300 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வோருக்கு, 50 சதவீதம் மானியம் என உள்ளதை மாற்றி, 25 முதல், 30 கோடி ரூபாய்க்கு சிறிய அளவில் மேம்பாட்டு பணி செய்பவர்களுக்கு  வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர். இதில், கூட்டமைப்பு ஆலோசகர் கருணாநிதி, ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், தொழில் நுட்ப ஆலோசகர் சிவலிங்கம் உட்பட பலர் பேசினர்.

Tags:    

Similar News