ஈரோட்டில் வரும் 5-ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை

வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி.5) அன்று ஈரோடு மாநகர் பகுதியில் இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-03 11:30 GMT

இறைச்சி விற்பனைக்கு தடை (கோப்பு படம்).

வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி.5) அன்று இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று ஈரோடு மாநகராட்சி ஆணையர்‌ சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வரும் 05.02.2023-ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று ஆடுவதை செய்யும் கூடத்தில் ஆடுவதை செய்ய அனுமதியில்லை எனவும், அனைத்து ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தேதியில் மாநகராட்சி ஆடுவதை கூடம் செயல்படாது. எனவே, அன்றைய தினத்தில் ஆடு, கோழி, மாடு ஆகிய உயிரினங்கள் வதை செய்யப்படக்கூடாது எனவும், மீறி இறைச்சி கடைகள் செயல்பட்டால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நீதி மன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அன்றைய தினம் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், கிளப்கள், ஓட்டல், பார்கள் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மது விற்பனை எதுவும் நடக்காது. மீறி மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News