பள்ளிச்சிறுமியை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய் - மகன் கைது
அம்மாபேட்டை அருகே பள்ளிச்சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த வழக்கில் மணமகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கைது செய்யப்பட்ட பூபதி, அவரது தாய் சண்முகவள்ளி
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இவர் கடந்த 6 ஆம் தேதி, கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த இந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் தனது பெற்றோருக்கு போன் செய்த அந்த சிறுமி, சேலம் மாவட்டம், எடப்பாடி ஆலச்சம்பாளையம், காட்டூரை சேர்ந்த, பூபதி, 24 என்பவர் ஆசைவார்த்தைக்கூறி தன்னை கட்டாய திருமணம் செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில், எடப்பாடியில் உள்ள பூபதி வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கூறி கடத்தி கட்டாய திருமணம் செய்த குற்றத்திற்காக பூபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ததோடு, பூபதியின் அம்மா சண்முகவள்ளியை குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.