ஈரோட்டில் கிணற்றில் குதித்து ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை!
ஈரோட்டில் திருமணமாகாத ஏக்கத்தில் கிணற்றில் குதித்து ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.;
ஈரோட்டில் திருமணமாகாத ஏக்கத்தில் கிணற்றில் குதித்து ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு வாய்க்கால் மேடு இந்தியன் நகர் முதலாவது வீதியை சேர்ந்தவர் சீராளன் மகன் பிரவீன் (வயது 35). என்ஜினீயரிங் பட்டதாரி. திருமணம் ஆகாதவர். இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தே வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக மன உளைச்சல் ஏற்பட்டு யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பிரவீன் நடைபயிற்சி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவர் அதே பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே இருக்கும் கிணற்று பகுதியில் பிரவீனின் செருப்பு கிடந்தது. இதை பார்த்த உறவினர்கள் சந்தேகத்தின் பேரில் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அவரை தேடிப் பார்த்தனர். அப்போது, பிரவீன் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர், பிணத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த பிரவீன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.