ஈரோடு போலீஸ்காரர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
கோவையில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்ற விழாவுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற ஈரோடு போலீஸ்காரர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.;
போலீஸ்காரர் பார்த்திபன்.
கோவையில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்ற விழாவுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற ஈரோடு போலீஸ்காரர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருபவர் பார்த்திபன் (வயது 33). இவர் அங்குள்ள ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டுவிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டதால் வெளி மாவட்ட போலீசார் உள்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில், ஈரோட்டில் இருந்து பார்த்திபனும் கோவை சென்று, ஆலாந்துறை அருகே உள்ள மத்வராயபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அவர் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, சம்பவத்தன்று போலீஸ்காரர் பார்த்திபன் திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனே, அவரை அருகில் இருந்த போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பார்த்திபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பார்த்திபனின் மாமியாருக்கு இதய கோளாறு இருந்ததாக தெரிகிறது. குடும்பத்தை பார்க்கவும், மாமியாரின் மருத்துவ சிகிச்சைக்கு செல்லவும் பார்த்திபன் விடுப்பு கேட்டு இருந்ததாக தெரிகிறது.
ஆனால், விடுப்பு கிடைக்காமல் கோவையில் 3 நாள் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.