பவானி: அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, மலேரியா எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம்!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, மலேரியா எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது.;

Update: 2025-04-22 10:40 GMT

பவானி அருகே உள்ள அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, மலேரியா எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் வட்டாரம் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, மலேரியா எதிர்ப்பு தினம் மற்றும் கோடை வெப்ப தாக்க பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன்பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காசநோய் பாதித்தவருடன் வசிப்போர் சிஓய்டிபி பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதின் அவசியம், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தொடர்ந்து, காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் விதம் மலேரியா எதிர்ப்பு தினத்தின் நோக்கம்,கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கோடை வெப்ப தாக்கத்தினால் ஏற்படும் உடல் பாதிப்புகள், கோடை வெப்ப தாக்கத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், கோடைவெப்ப தாக்க அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழிமுறைகள், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் அவசியம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோடைகாலத்தில் அடிக்கடி நீர் பருக வேண்டியதின் அவசியம், கோடைக்கால உணவு முறைகள், கோடை காலத்தில் உடுத்த வேண்டிய உடைகள், பெண்களுக்கான தற்காலிக கருத்தடை வழிமுறைகள், இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு ஏற்படும் சமூகப் பின்னடைவுகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் , மருத்துவ அலுவலர்கள் மரு. புவியரசு, மரு. தினேஷ்குமார், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயசேகர், சுகாதார ஆய்வாளர்கள் ஜெகதேஷ் குமார், ஸ்ரீநாத்,பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 90 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் மலேரியா, டெங்கு எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Similar News