அந்தியூர் அருகே இளம்பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-03-17 00:10 GMT

சசிகலா.

அந்தியூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் வீரனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசு. இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சசிகலா (வயது 26). தமிழரசும், சசிகலாவும் காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழரசுவுக்கும், சசிகலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை சசிகலா கழுத்தில் சிறிய காயத்துடன் சமையல் அறையில் உயிரிழந்து கிடந்ததை தமிழரசு பார்த்தார். உடனே இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலா கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Similar News