சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே விறகு சேகரிக்க சென்ற பெண் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க சென்றபோது காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தார்.;

Update: 2025-05-08 00:20 GMT

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க சென்றபோது காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரை அருகே உள்ள குன்றி குஜ்ஜம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கெஞ்சன் மனைவி நாகி (வயது 44). இவர் நேற்று கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார்.

அவருடன் சில பெண்களும் விறகு சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை திடீரென வெளியே வந்தது. அந்த யானை அங்கு விறகு சேகரித்துக்கொண்டிருந்த நாகியை தாக்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டதும் அங்கு விறகு பொறுக்கி கொண்டிருந்த மற்ற பெண்கள் தப்பி ஓடினர். பின்னர், அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடம்பூர் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News