ஈரோட்டில் வடமாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜவுளி வியாபாரி கைது!

ஈரோட்டில் வடமாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜவுளி வியாபாரி கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-04-19 06:00 GMT

ஈரோட்டில் வடமாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜவுளி வியாபாரி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் மணிகண்டன் பூபதி (வயது 47) ஜவுளி வியாபாரி.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுப்பிரமணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர், அந்த வாலிபர் திடீரென தான் வைத்திருந்த பிளேடால் சுப்பிரமணியின் கழுத்தை அறுத்தார்.

இதனை கண்ட ஜெயலட்சுமி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது, மணிகண்ட பூபதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடித்து கொடுத்து சூரம்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.

இதில், படுகாயமடைந்த வடமாநில வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பிளேடால் அறுத்ததில் காயம் அடைந்த சுப்பிரமணி சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தது, மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சோம ஓரான் என்பவருடைய மகன் ராபி ஓரான் (28) என்பது தெரியவந்தது.

இதனிடையே, ராபி ஓரான் இறந்ததையடுத்து, போலீசார் இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை தாக்கிய சுப்பிரமணியின் மகனான மணிகண்ட பூபதியை கைது செய்தனர். மேலும், சில நபர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Similar News