சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.;

Update: 2025-03-10 03:20 GMT

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் திலீப் மகன் சுரேஷ் (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் இவர் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் அரியப்பம்பாளையம் காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றான். பின்னர் ஆற்றில் இறங்கி நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தான்.

அப்போது, சுரேஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளான். மேலும், சுரேசுக்கு நீச்சல் தெரியாததால், எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கினான். இதை பார்த்த நண்பர்கள் அங்கு சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று சுரேசின் உடலை கைப்பற்றினர்.

பின்னர், சுரேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News