கோபி அருகே 2 கார்கள் மோதல்: லாரி டிரைவர் பலி: பிரேத பரிசோதனை தாமதம் - உறவினர்கள் மறியல்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் லாரி டிரைவர் பலியானார். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் கிடைப்பதில் தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
விபத்துக்குள்ளான 2 கார்களையும், விபத்தில் இறந்த லாரி டிரைவர் சுந்தரத்தை படத்தில் காணலாம்.
கோபி அருகே 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் லாரி டிரைவர் பலியானார். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் கிடைப்பதில் தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் அம்மன்கோவில் பதி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 52). லாரி டிரைவர். இவருடைய மனைவி வசந்தாமணி (46). இவர்களுக்கு யோகசித்ரா (18) என்ற மகளும், ஜோதிகரன் (17) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு அம்மன் கோவில்பதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (52), காளியம்மாள் (55), ஈஸ்வரி (55), நவமணி (54), ஜெகநாதனின் மகள் பவிக்ஷா (9), பழனியம்மாள் (75) ஆகியோருடன் காரில் நேற்று முன்தினம் சென்றனர்.
இதைத் தொடர்ந்து, திருமணம் முடிந்ததும் இரவில் அவர்கள் அனைவரும் மீண்டும் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சுந்தரம் ஓட்டினார். கோபியை அடுத்த கள்ளுமடை பஸ் நிறுத்தம் அருகே சென்றனர்.
அப்போது, எதிரே வந்த திங்களூர் வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த திருமலைசாமி (50), தேனி மாவட்டம் ஆண் டிப்பட்டியை சேர்ந்த பால்ராஜ் (32) ஆகியோர் வந்த காரும், சுந்தரத்தின் காரும் எதிர் பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் 2 கார்களும் பலத்த சேதம் அடைந்தன. மேலும் இந்த விபத்தில் 2 கார்களில் வந்த 9 பேரும் காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு மற்றும் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதில் மேல் சிகிச்சைக்காக சுந்தரம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கோபி அரசு ஆஸ்பத்திரியில் சுந்தரத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் சுந்தரத்தின் உடல் நேற்று மாலை 3.30 மணி ஆகியும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய உறவினர்களிடம் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அவருடைய உறவினர்கள் மற்றும் அம்மன்கோவில் பதியை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து கோபி- சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்தும் கோபி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அப்போது போலீசார் கூறுகையில், 'பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் விரைந்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அந்த சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் கோபியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.