சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதை சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற சிறுத்தை; வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை சாலையில் சிறுத்தை ஒய்யாரமாக நடந்து சென்றது.;
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை சாலையில் சிறுத்தை ஒய்யாரமாக நடந்து சென்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை சாலையில் தாளவாடிையை சேர்ந்தவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 6வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடை போட்டு சென்று கொண்டிருந்தது.
இதைக் கண்ட வாகன ஓட்டி சிறுத்தையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தாளவாடி மலைப்பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.