பன்றி குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கோபி அடுத்த பங்களாப்புதூர் அருகே காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-08-30 09:30 GMT

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மோகனரங்கம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள கொங்கர்பாளையம் கோவில் அண்ணமார் தெருவை சேர்ந்தவர் மோகனரங்கம் (58). விவசாயி. இவர் சம்பவத்தன்று அதிகாலை கொங்கர்பாளையம் சமனாக்காடு பகுதியில் இருக்கும் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் வாணிபுத்தூர்- ஆயாத்தோட்டம் வழியாக வாய்க்கால் கரையினை ஓட்டிய சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காட்டுப்பன்றி குறுக்கே வந்ததை கண்டு மோகனரங்கம் திடீரென மோட்டார் சைக்கிளில் பிரேக் போட்டுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவர் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த மோகனரங்கனை அவ்வழியாக வந்த சிலர் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மோகனரங்கம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் இன்று அதிகாலை மோகனரங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News