சத்தியமங்கலம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விவசாயி பலி: மீட்க சென்ற மீனவரும் பலியான பரிதாபம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விவசாயி உயிரிழந்த நிலையில், அவரை மீட்க சென்ற மீனவரும் பரிதாபமாக பலியானார்.;
விவசாயி சிவக்குமார், மீனவர் மூர்த்தி.
சத்தியமங்கலம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விவசாயி உயிரிழந்த நிலையில், அவரை மீட்க சென்ற மீனவரும் பரிதாபமாக பலியானார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகப்புதூர் அருகே உள்ள முள்ளிக்காபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை தனது தோட்டத்தில் இருந்த காரை சிவக்குமார் பின்னோக்கி நகர்த்தினார்.
அப்போது, அந்த கார் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 80 அடி ஆழ கிணற்றில் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தது. கிணற்றில் 50 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்ததால் காருடன் சிவக்குமார் தண்ணீரில் மூழ்கினார்.
இதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சிவக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் இருந்ததால் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதைத்தொடர்ந்து, பவானிசாகரில் இருந்து மீனவர்கள் 4 பேரை வரவழைத்தனர். அவர்களும் கிணற்றில் இறங்கி சிறிது நேரம் தேடி பார்த்தனர். ஆனால் சிவக்குமார் கிடைக்காததால் மீனவர்கள் வெளியே வந்தனர்.
இதையடுத்து, அக்கம்பக்கத்து விவசாயிகளின் உதவியுடன் 4 மின் மோட்டார்கள் பொருத்தி கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர். இதற்கிடையே கிணற்றில் தண்ணீர் சுமார் 15 அடியாக குறைந்த போது, மீண்டும் மீனவர்கள் தண்ணீரில் குதித்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், சிவக்குமாரை மீட்க முடியவில்லை. இதனால் 3 மீனவர்கள் மேலே வந்தனர். பவானிசாகரை சேர்ந்த மூர்த்தி என்ற மீனவர் மட்டும் வெளியே வரவில்லை. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என கூறப்பட்டது.
அதன் பின்னர், நேற்று அதிகாலை தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. அப்போது தண்ணீரில் மூழ்கியதால் மூர்த்தி உயிரிழந்து பிணமாக கிடந்தார். தொடர்ந்து, கிரேன் மூலம் கார் மேலே தூக்கி கொண்டு வரப்பட்டது.
சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட காருக்குள் சிவக்குமாரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.