அந்தியூர் காவல் நிலையத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த சமூக ஆர்வலர்

அந்தியூர் காவல் நிலையத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த சமூக ஆர்வலர் மற்றும் துப்பாக்கி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2022-02-06 04:30 GMT

சமூக ஆர்வலர் கோவிந்தராஜ்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துப்பாக்கி உரிமத்துடன் வைத்திருப்பவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், கடந்த 2ஆம் தேதி, தனது உரிமம் பெற்ற டபுள் பேரல் துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக வந்திருந்தார்.

அப்போது அந்தியூர் அருகே உள்ள தவிட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராசு,50, என்ற சமூக ஆர்வலர், ஸ்ரீதர் கொண்டு வந்த துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதாக துப்பாக்கியை ஸ்ரீதரிடம் இருந்து வாங்கினார். காவல் நிலைய வளாகத்தில் துப்பாக்கியை பிடித்தபடி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதோடு, நின்றுவிடாமல் ஆர்வக் கோளாறில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுகுறித்து மாவட்ட காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அந்தியூர் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, துப்பாக்கியின் உரிமையாளர் ஸ்ரீதர் மற்றும் போஸ் கொடுத்து ஆர்வக் கோளாறில் சமூக வலைதளங்களில் பரப்பிய சமூக ஆர்வலர் கோவிந்தராசு ஆகிய இருவர் மீதும் ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News