ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் குவிந்த 480 கோரிக்கை மனுக்கள்

ஈரோட்டில் இன்று (மார்ச் 17) நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 480 கோரிக்கை மனுக்கள் குவிந்தன.;

Update: 2025-03-17 09:20 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் பெற்று குறைகளை கேட்டறிந்த போது எடுத்த படம்.

ஈரோட்டில் இன்று (மார்ச் 17) நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 480 கோரிக்கை மனுக்கள் குவிந்தன.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கல்வி கடன், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், புதிய குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மற்றும் உதவித்தொகை வேண்டி, சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 480 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News