ஈரோடு மாவட்டத்தில் நாளை 37-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளை 1,597 மையங்களில் 37-வது கட்ட மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Update: 2022-09-17 11:45 GMT

கோப்பு படம்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.  மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News