பவானி அருகே 2-வது நாளாக மின்தடை: மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் அவதி

பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையினால் 2-வது நாளாக மின்தடை ஏற்பட்டது. இதனால், மாணவர்கள் தேர்விற்கு தயாராக முடியாமல் அவதி.

Update: 2022-05-03 04:30 GMT

மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதிகளான கேசரிமங்கலம், குப்பிச்சிபாளையம், சேகண்டியூர், கல்பாவி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் கிராமங்களில் இருந்த 40-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தது.  இதையடுத்து நேற்று இரவு மின்சார வினியோகம் தடைபட்டது. தொடர்ந்து மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் 24மணி நேரம் கடந்து பணிகள் முடிவடையாததால்  இரண்டாவது நாளாக 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

இதனால் பெண்கள்,  குழந்தைகள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் மின்வெட்டு காரணமாக செல்போன், மெழுகுவர்த்தி, அகல் விளக்கு வெளிச்சத்திலும் பெண்கள் வீட்டு வேலைகள் உள்ளிட்ட பணிகளை சிரமத்துடன் செய்து வருகின்றனர். அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தேர்வுக்கு படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு மின்சாரம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News