பெருந்துறை அருகே தடுப்பு கம்பி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 15 பயணிகள் காயம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தடுப்பு கம்பி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 15 பயணிகள் காயமடைந்தனர்.;
பெருந்துறை அருகே தடுப்பு கம்பி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 15 பயணிகள் காயமடைந்தனர்.
கோவையில் இருந்து சேலம் நோக்கி நேற்று ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 29 பயணிகள் இருந்தனர். கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிக்கோவில் பிரிவு அருகே அந்த பேருந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மண் குவியலில் ஏறியது
மேலும், அங்கிருந்த இரும்பு தடுப்பு கம்பி மீது மோதி நின்றது. இதில் பேருந்தின் முன்புற கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து சிதறியது. இந்த விபத்தில் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி 15 பயணிகள் காயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
விபத்து நடந்ததும் ஓட்டுநர் , நடத்துநர் பேருந்தில் இருந்து இறங்கி அங்கிருந்து ஓடிவிட்டனர். காயம் அடைந்த பயணிகள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.