அந்தியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 12 ஆடுகள் பலி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 12 ஆடுகள் பலியாகின.;

Update: 2025-03-25 23:50 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 64). இவர் 30 ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு சண்முகம் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை வந்து பார்த்தபோது பட்டிக்குள் 12 ஆடுகள் ஆங்காங்கே கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. மேலும் 3 ஆடுகள் கடிபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தன. 5 ஆடுகள் காயத்துடன் இருந்தன. சில ஆடுகள் காணாமல் போயிருந்தன‌.

இதுகுறித்து அந்தியூர் வனத்துறை அதிகாரிகளுக்கு சண்முகம் தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

முதலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் இறந்த கிடந்த ஆடுகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, வனத்துைறயினர் பட்டியில் பதிந்திருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

தெருநாய் கள் ஆடுகளை கடித்து கொன்றனவா? அல்லது அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மர்ம விலங்கு ஆடுகளை வேட்டையாடியதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இறந்த ஆடுகளுக்கு அரசு உரிய இழப்பீடு தரவேண்டும் என்று சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News