உடல்நிலை பாதித்த ஆசிரியரை 10 கி.மீ. தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற மக்கள்

பர்கூர் கத்திரிமலை கிராமத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியரை 10 கி.மீ தூரம் தொட்டில் கட்டி கிராம மக்கள் தூக்கிச்சென்றனா்.

Update: 2021-11-29 12:30 GMT

உடல்நலம் பாதித்த ஆசிரியரை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற பொதுமக்கள்.

அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராமத்தில் உள்ளது கத்தரி மலை கிராமம். அந்தியூரில் இருந்து கத்திரி மலைக்கு செல்ல வேண்டுமென்றால் சேலம் மாவட்டம் கொளத்தூர் வரை தான் பேருந்தில் செல்ல வேண்டும்.

கத்திரி மலை கிராமத்துக்கு சரியான பாதை வசதி கிடையாது. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாது. கொளத்தூரில் இருந்து சின்னதண்டா வழியாக 10 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள கத்திரி மலை கிராமத்துக்கு நடந்துதான் செல்லவேண்டும்.

இந்த நிலையில் கத்திரி மலை கிராமத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில், ஆசிரியர் குணசேகரன் நேற்று மதியம் 3 மணி அளவில் வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த மலைவாழ் மக்கள் உடனே அங்கு சென்றனர். வாகனத்தில் செல்ல முடியாத நிலை உள்ளதால், தொட்டில் கட்டி அதில் ஆசிரியரை வைத்து சிகிச்சைக்காக 10 கி.மீ. தூரத்தில் உள்ள கொளத்தூருக்கு நடந்தே சென்றனர்.

அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதல்-உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குணசேகரனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News