திண்டுக்கல்லில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 2.12.2023 பழனி, பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது

Update: 2023-12-01 02:00 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி,

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 02.12.2023 அன்று பழனி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சிறப்புத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 02.12.2023 (சனிக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த இளைஞர்கள் பங்கேற்று, தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, ஆதார்அட்டை, ஓட்டுநர் உரிமம் அடையாள அட்டை, சுய விவரக் குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நகலுடன் கலந்து கொள்ளலாம்.

மேலும், இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் பதிவு செய்து கொள்ளலாம். எனவே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் கலந்து கொண்டு, பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News