கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை: 5 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு

நத்தம் அருகே புன்னமலை வனப்பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு.

Update: 2021-12-29 10:02 GMT

நத்தம் அருகே புன்னமலை வனப்பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே முளையூருக்கு அருகே புன்னமலை வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான காட்டெருமைகள் இருந்து வந்த நிலையில் இன்று இந்த மலை அடிவாரத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகே பெரியதம்பி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இதில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் 5 அடி தண்ணீர் உள்ளது. அருகே உள்ள மலையில் இருந்து நேற்று  இரவு இரை தேடி வந்த 16 வயது காட்டெருமை பெரியதம்பியின் கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

இதுபற்றி நத்தம் வனத்துறை, தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கபட்டது. தவலறிந்து சம்பவ பகுதிக்கு அழகர்கோயில் வனசரக அலுவலர் ஜெயசீலன் தலைமையிலான வனத்துறை, மற்றும் தீயணைப்பு நிலை அலுவலர் திருகோள்நாதர் தலைமையிலான தீயணைப்பு துறை ஆகிய இருதுறையினரை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கிரேன், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கயிறு கட்டி மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.

பின்னர் இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வரவழைக்கபட்ட வனக்கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர்கள் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தினர். ஐந்து மணி நேரம் தொடர் போராட்டத்திற்கு பின்னர் பொதுமக்கள் ஒத்துழைப்போடு காட்டெருமையை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து மயக்கம் தெளிந்த காட்டெருமை புன்னமலை வனப் பகுதிக்குள் சென்றது. சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News