பழனிக்கு வைரவேலுடன் பாதயாத்திரையாக செல்லும் 400 ஆண்டுகள் பாரம்பரிய நகரத்தார் காவடி…

பழனியில் தைப்பூசத்தை காண குன்றக்குடியில் இருந்து வைரவேலுடன் நகரத்தார் காவடி பாதயாத்திரையாக சென்றது.

Update: 2023-01-31 06:37 GMT

தைப்பூசத்தை காண பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும் நகரத்தார் காவடி.

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல், உள்ளிட்ட நகரத்தார்கள் 400 ஆண்டுகள் பாரம்பரியமிக்க வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக பழனி சென்று முருகனை தரிசித்து காவடி செலுத்தி தங்கள் நேர்த்திகடனை செலுத்துவது வழக்கம்.

அதன்பிறகு நடந்தே வீடு திரும்புவது அவர்களது தனிச்சிறப்பு. கால மாற்றத்திற்கேற்ப தங்களது பழக்கங்களை மாற்றாது தங்களது முன்னோர்கள் சென்ற பாதையில் இன்றும் மாறாது தங்களது பயணங்களை நகரத்தார்கள் தொடர்ந்து வருகின்றனர்.


சுமார் 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய நகரத்தார் காவடி, கடந்த 29 ஆம் தேதி குன்றக்குடியில் இருந்து புறப்பட்டது. பாரம்பரிய வைரவேலுடன் 291 சர்க்கரை காவடிகள் மற்றும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.


இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சென்ற நகரத்தார் காவடிக்கு நத்தம் வாணியர் பஜன மடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பாதயாத்திரை குழு பிப்ரவரி 4 ஆம் தேதி தை பூசம் னத்தன்று பழனி சென்றடைந்து. அதன் பின் பிப்ரவரி 6 ஆம் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்திய பின் அவர்கள் நடந்தே வீடு திரும்புவார்கள். இந்த பயணம் மொத்தம் 19 நாட்கள் இருக்கும் என நகரத்தார் காவடி குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.


நத்தம் வாணியர் பஜனை மடத்தில் இன்று காலை பானக பூஜை நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் பழனியை நோக்கி புறப்பட்டன. காவடி ஆட்டத்துடன் பக்தர்கள் பழனியை நோக்கி புறப்பட்டனர்.

நகரத்தார் காவடிகளுக்கு நத்தம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களால் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சர்க்கரை காவடியுடன் புறப்பட்ட முருக பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பழனியை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். செல்லும் இடமெல்லாம் அன்னதானத்துடன் பக்தியை வளர்ப்பது நகரத்தார்களின் சிறப்பம்சமாகும் என அந்தக் குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News