பாலக்கோடு அருகே பட்டதாரி வாலிபர் திடீர் மரணம்: தவறான சிகிச்சை காரணமா?

பாலக்கோடு அருகே தவறான சிகிச்சையால் பி.இ. பட்டதாரி வாலிபர் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2021-09-11 18:00 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள வளைகாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் கார்த்திக், 26. பி.இ. பட்டதாரி. இவர்,  ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.   

நேற்று காலை 8 மணியளவில்இடுப்பு வலியின் காரணமாக, மாரண்டஅள்ளி உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு சென்ற பின்பு உடல்வலி அதிகமாக இருக்கவே, மாரண்டஹள்ளியில் உள்ள மற்றொரு டாக்டரிடம் சென்றுள்ளார். அவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

ஆனால், வீடு திரும்பிய அவருக்கு திடீரென மயக்கம் ஏற்படவே,  அவரை  உறவினர்கள் மீண்டும் மாரண்டஅள்ளி உள்ள சமூக சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து இறப்பிற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தவர் தான் காரணம் என்றும் அவர்கள் முறையாக மருத்துவம் படிக்கவில்லை என்றும்,  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, அவரது உறவினர்கள் போலீசில் கூறினர். அதன் அடிப்படையில்,  காவல் துறையினர் சிகிச்சை அளித்த டாக்டர் கோவிந்தராஜ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News