பாலக்கோடு: கெயில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

பாலக்கோடு அருகே கெயில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-20 09:30 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் எர்ரப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிடங்கு முன்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்ததுக்கு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் தலைமை தாங்கினார்.

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார், கெயில் நிறுவன பொதுமேலாளர் சங்கர், பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சௌந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர்.

அதில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை விளைநிலங்கள் வழியாக பதிக்காமல் சாலையோரமாக பதிக்க வேண்டும், எர்ரப்பட்டி கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றவேண்டும், மேலும் குழாய்கள் கொண்டு வந்து இறக்குவதைத் தடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை போராட்டக் குழுவினர் தாசில்தார் அசோக்குமாரிடம் வழங்கினர்.

பின்னர் கிடங்கு முன்பு அமர்ந்து கோஷமிட்டனர். நீண்ட நேரமாகியும் கோரிக்கைகளை ஏற்காததால் விவசாயிகள் வாகனங்களில் ஏறி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறிவிட்டு சென்றனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்குள் விவசாயிகள் அனுமதி மறுக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயிலில் கோஷமிட்டனர். அப்போது அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தைத் கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகள் நடத்திய காத்திருக்கும் போராட்டத்தையொட்டி எர்ரப்பட்டி மற்றும் கலெக்டர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News