ஆய்வுக்கு வந்த தர்மபுரி கலெக்டரிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மீது ஊராட்சி தலைவர்கள் புகார்

காரிமங்கலத்தில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது திமுக, பாமக, ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-19 07:30 GMT

காரிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினியிடம் புகார் தெரிவித்தனர்.

காரிமங்கலத்தில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது திமுக, பாமக, ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளது. அதிமுக, திமுக பாமக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தலைவர்களாக உள்ளனர். இந்த ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக உதவி பொறியாளராக பணி புரியும் பூங்கொடி என்பவர் மீது பல ஊராட்சி தலைவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை ஊராட்சிகளில் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு குளறுபடிகள் நிலவி வருகிறது. ஊராட்சிகளில் பணி தேர்வு செய்வதில் இருந்து பணி அளவீடு செய்ய திட்டமிட்டு தாமதம் செய்து வருவதாக உதவி பொறியாளர் பூங்கொடி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டரின் நேர்முக உதவியாளர் நடத்திய ஆய்வு கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்.

மேலும் பிளீச்சிங் பவுடர் மூட்டை ரூ 750 க்கு பதிலாக 1600 கேட்பதாக ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காரிமங்கலம் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று பணிகள் தொடர்பாகஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு வந்த மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் திமுக, பாமக, ஊராட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் தொடர்பாக உதவி பொறியாளர் பூங்கொடி மீது புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

ஊராட்சி ஒன்றிய அதிகாரி மீது ஊராட்சி தலைவர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்த சம்பவம் காரிமங்கலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News