தனி அலுவலர்களை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்: ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு

ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்க நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களைதிரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-01-22 15:00 GMT

தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள, 251 ஊராட்சிகளிலும், அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த விழா அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடைபெற்றது.

இந்த விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களை அவமதிக்கும் வகையில், இதற்காக தனி அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதன்சினி நியமித்துள்ளார். இந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் இல்லாமல் தனி அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.

இதனையறிந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷியை சந்திக்க வந்துள்ளானர். ஆனால் சந்திக்க முடியாததால், இன்று உதவி இயக்குநரை சந்தித்து முறையிட்டு, இந்த போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தலைவர்கள் கூட்டமைப்பினர், கிராம ஊராட்சிகளுக்கு கடந்த இரு ஆண்டுகளாக போதிய நிதி ஒதுக்காததால் பெரும்பாலான ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக கடன் பெற்று, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.

இதற்கான நிதி விரைவில் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமையில் தலையீடும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்க தனி அலுவலர்களை நியமித்து, மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி செயல்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியரை சந்தித்து முறையிட சென்றோம். ஆனால் மாவட்ட ஆட்சியர் எங்களை சந்திக்க அனுமதிக்கவில்லை.

இதனால் தற்போது, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், உதவி இயக்குநரிடம், தனி அலுவலர்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம். மேலும் இது தொடர்பாக, துறை அமைச்சர், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளோம். மேலும் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்க உள்ளோம்.

ஆகவே ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமையில் அதிகாரத்தில் தலையிடும் தனி அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News