ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு: மகிழ்ச்சியில் கடலூர் மாவட்ட விவசாயிகள்

கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி, டெல்டா வட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் காவிரி பாசனம் பெறுகிறது.

Update: 2021-06-05 17:00 GMT

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படும். அதனால்,  ஜூனில் துவங்கி செப்டம்பர் வரையில் குறுவை, அக்டோபரில் துவங்கி ஜனவரி வரையிலான காலத்தில் சம்பா ஆகிய இருபோக சாகுபடி செய்து வந்தனர்.

ஆனால், கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு முறையான தண்ணீர் திறக்காததால், கடலுார் மாவட்ட டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேட்டூர் தண்ணீர் மற்றும் வடகிழக்கு பருவ மழையை நம்பி சம்பா சாகுபடி மட்டும் நடந்து வந்தது.

பெரும்பாலான டெல்டா விவசாயிகள் தங்கள் நிலங்களில் ஆழ்துளை கிணறு மூலம் போர்வெல் அமைத்து சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு 40 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு மின் மோட்டார் பயன்படுத்தி, குறுவை சாகுபடியை முன்கூட்டியே ஆர்வத்துடன் துவங்கியுள்ளனர். நிலத்தை சீர் படுத்தி உழவு ஓட்டுவது, நாற்று விடுவது, வளர்ந்த நாற்றுகளை பறிப்பது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள்  ஈடுபட்டு வருகின்றனர்.பல கிராமங்களில் நாற்று விடும் பணியும், சில கிராமங்களில் நாற்று எடுத்து நடும் பணியும் நடக்கிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி முதல் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 12ல் திறக்கப்படும் தண்ணீர், ஒரு மாதத்திற்குள் கீழணை மற்றும் வீராணம் ஏரிக்கு வந்து சேரும். அங்கிருந்து தேவையானபோது பாசனத்திற்கு திறக்கப்படும் என்பதால், குறுவை சாகுபடி மட்டுமின்றி அடுத்த சம்பா பருவத்திற்கும் தண்ணீர் கிடைக்கும் என்றும், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஊடுபயிரான உளுந்து சாகுபடி செய்யவும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நம்பிக்கையுடன் குறுவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்.

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை விவசாய சங்கங்களும் வரவேற்றுள்ளன . குறுவை சாகுபடி சிறப்பாக நடக்க உரிய காலத்தில் தண்ணீர் திறப்பது அவசியம் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில், காவிரி பாசன பகுதியில் வாய்க்கால்கள், ஆறுகள், கிளை வாய்க்கால்களை முழுமையாக துார்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்குவதற்கு உதவியாக கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவது, குறுகிய கால நெல்விதை, உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்வது போன்றவற்றில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

Tags:    

Similar News