தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் சிறையில் அடைப்பு

பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கொலை வழக்கில் சரண் அடைந்த கடலூர் எம்.பி. ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-10-11 11:08 GMT

கடலூர் எம்.பி. ரமேசை போலீசார் சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கடந்த மாதம் 19ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முந்திரி தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்த நிலையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றப்பட்டதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேக வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  ரமேஷ் தவிர மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த  நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பண்ருட்டி ஜே.எம். இரண்டாவது கோர்ட்டில்  இன்று ரமேஷ் சரணடைந்தார்.

அதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் கற்பகவல்லி சரணடைந்த ரமேசை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அப்போது வழக்கறிஞர்கள் அவர் வருமான வரி செலுத்தி வருவதாகவும் எம்.பி.யாக இருப்பதால் அவருக்கு சிறையில்  முதல் வகுப்பு வசதி வேண்டும் என்பதால் கடலூர் மத்திய சிறைக்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் படி கொரோனா பரிசோதனை செய்து முடிவு வரும்வரை குற்றம்சாட்டப்பட்டவர் கிளை சிறைச்சாலையில் இருப்பதுதான் முறை என்பதால் இன்று அவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து அதன் பிறகு அவரை நாளை முடிவு வந்ததற்குப் பிறகு அவரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் 13ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை கடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும்  ஆஜர்படுத்த வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரமேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கடலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை மறுநாள் அந்த மனு விசாரணைக்கு வரும் பொழுது போலீஸ் காவல் வழங்கப்படுகிறதா என்ற என்ற விவரம் தெரியவரும். இதனிடையே கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிந்த பிறகு கடலூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News