வடலூர் அருகே தண்ணீர் தட்டுப்பாட்டால் நாற்றங்கால் கருகி வருகிறது

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வடலூரில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நாற்றங்கால் கருகி வருவதால் விவசாயிகள் கவலை

Update: 2021-06-21 02:36 GMT

வடலூர் அருகே தண்ணீர் தட்டுப்பாட்டால் நாற்றங்கால் கருகி வருகிறது 

வடலூர் அருகே கொளக்குடி பெரிய ஏரியில் என்.எல்.சி.இரண்டாம் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏரி நீரை நம்பி கொளக்குடி மற்றும் கருங்குழி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் அமைத்து நெல்விதைத்தனர். அந்த நெல் விளைந்து நன்கு வளர்ந்து வந்த நிலையில் பெரிய ஏரி தண்ணீரின்றி வறண்டது. இதனால் நாற்றங்காலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் நாற்றங்காலில் உள்ள பயிர்கள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பெரும் செலவு செய்து குறுவை சாகுபடியை தொடங்கினோம். பயிர்கள் நன்கு முளைத்து வந்ததால், இந்தாண்டு நல்ல வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் என்.எல்.சி.இரண்டாம் சுரங்கத்தில் இருந்து ஏரிக்கு நீர் அனுப்ப அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால்,  தற்போது ஏரி தண்ணீர் இ்ன்றி வறண்டு வருகிறது.

இதனால் நாற்றங்காலுக்கே தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்கள் எங்கள் கண் முன்னே காய்ந்து கருகி வருகிறது. இதனால் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News