தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.100! வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

Update: 2021-06-27 07:07 GMT

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலைக்கு ஏற்ப இந்தியாமுழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்களின் கூட்டமைப்பு நாள்தோறும் மாற்றி அமைக்கிறது.

இதனால் நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. தமிழகத்தில் ஜூன் மாதத்தில் மட்டும்  20, 25, 30 காசுகள் என்ற அடிப்படையில் பெட்ரோல் நாள்தோறும் உயர்ந்து உச்சக்கட்டமாக லிட்டர் ரூ.100ஐ தொட்டுள்ளது.

அரியலுார், செங்கல்பட்டு, கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்துார், திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், விருதுநகர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ தொட்டுள்ளது.

பெட்ரோல் விலை அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.101.33க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.28க்கும் கடலுாரில் விற்கப்படுகிறது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதாலும், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து வருவதாலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News