ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி வந்த அவர், அதில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

Update: 2021-08-02 08:30 GMT

தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்

கோவை செல்வபுரம், முனியப்பா தோட்டம் செட்டி வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (36), இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும் (28), 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சந்தையில் காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து, உணவகங்களுக்கு விற்பனை செய்து வந்த கார்த்திக், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. காய்கறி விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை ஆன்லைனில் செலுத்தி கிரிக்கெட் விளையாடி வந்த அவர், அதில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த சில தினங்களாக கார்த்திக், கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதுகுறித்து தனது மனைவியிடம் சொல்லி கார்த்திக் வேதனைப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டில் சம்பாதிக்க முடியாமல் பணத்தை இழந்த விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி திவ்யா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார், கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News