கோவையில் இரண்டாம் கட்ட நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம்

இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பொருட்களை வழங்க டோக்கன் வழங்கப்படவுள்ளது.

Update: 2021-06-11 08:04 GMT

இரண்டாம் கட்ட கொரோனா நிவாரணம் வழங்க டோக்கன் வழங்கப்பட்டது.

கொரோனா  ஊரடங்கு நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாம் கட்ட நிவாரண தொகை 2 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது.

இதற்காக ஏற்கனவே டோக்கன் கொடுக்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணங்களால் அவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 15 ம் தேதி முதல் இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகின்றது. இதற்கான டோக்கன் விநியோகம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் 1423 ரேஷன் கடைகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளது. இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்றும், அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் வைத்தும் டோக்கன் விநியோகம் செய்யப்படுகின்றது. ரேஷன் கடை ஊழியர்கள் முக கவசம் அணிந்தும், கையுறை அணிந்தும் டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் 200 பேர் வீதம் ரேஷன் கடைகளுக்கு வந்து நிவாரண தொகை மற்றும் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து டோக்கன் விநியோகம் செய்வது தங்களுக்கு வசதியாக இருப்பதாகவும், கூட்ட நெரிசலில் சிக்க தேவை இல்லாத சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இன்று முதல் வரும் 14 ம் தேதி வரை டோக்கன் விநியோகமானது செய்யப்பட இருப்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News