சொத்துக்களை மார்க்சிஸ்ட் கட்சிக்கு எழுதி வைத்த தம்பதி

40 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் வங்கி வைப்பு தொகை உள்ளிட்டவற்றை உயில் எழுதி வைத்துள்ளார்.

Update: 2021-09-01 04:15 GMT

சொத்துகளை வழங்கிய துளசிதாஸ் - மலர்கொடி தம்பதியினர்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் துளசிதாஸ், மலர்க்கொடி தம்பதியினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் துவக்ககால தலைவர்களில் ஒருவராக துளசிதாஸ் இருந்துள்ளார். இவர் மின் ஊழியர் மத்திய அமைப்பின் துத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். ஹார்பர் சங்கத்தை சிஐடியு சங்கத்துடன் இணைத்ததில் துளசிதாஸ்க்கு பெரும் பங்குண்டு. மின்வாரிய பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் தொண்டாமுத்தூரில் வசித்து வருகிறார். துளசிதாஸ் தம்பதியருக்கு இரண்டு மகள், மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மகன்கள் மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தங்களது ரூ 40 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் வங்கி வைப்பு தொகை உள்ளிட்ட அனைத்தையும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உயிலாக எழுதி வைத்துள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலைவர்களிடம் துளசிதாஸ், மலர்க்கொடி தம்பதியினர் மனமுவந்து வழங்கினர்.

துளசிதாஸ் தம்பதியினர் கூறுகையில், எங்களுக்கு இரண்டு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். மகன்கள் மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர். எங்களுக்கும் வயது மூப்பு அடைந்து விட்டது. எங்களது கடைசி நாட்களில் எங்களை பாதுகாக்க உறவுகளை தாண்டி நான் நேசித்த மார்க்சிஸ்ட் கட்சி பாதுகாக்கும் என்பதால் எங்களது சொத்துக்கள் முழுவதையும் கட்சியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளேன் என்றார். கட்சிக்கு சொத்துகளை எழுதி வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News