முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கிய இரண்டாம் வகுப்பு மாணவி.

பட்டு புடவை வாங்க உண்டியலில் வைத்திருந்த 1516 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய இரண்டாம் வகுப்பு மாணவி

Update: 2021-05-12 11:15 GMT

கோவை காந்தி மாநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் டாட்டாபாத் பவர் ஹவுஸ் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது ஏழு வயது மகள் பிரணவிகா, தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் இரண்டாம் வகுப்பு பயிலும் மின்வாரிய ஊழியர் பழனிச்சாமி மகள் பிரணவிகா பட்டு புடவை வாங்க உண்டியலில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை தனது தந்தையுடன் ஐஓபி ஆர்.எஸ் புரம் கிளை வங்கிக்கு சென்று வங்கி ஊழியர்கள் முன்பு உடைத்து அதில் இருந்த 1516 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இது குறித்து பிரணவிகாவின் தந்தை பழனிச்சாமி கூறுகையில் நேற்று செய்திகள் பார்த்து கொண்டிருந்த போது முதல்வரின் வேண்டுகோள் தொலைகாட்சி மூலம் ஒளிபரப்பு செய்தது குறித்து தன்னிடம் கேட்டதாகவும், இது குறித்து அவளிடம் விளக்கம் அளித்தபோது அதை ஆர்வமுடன் கேட்டவர், தான் சேர்த்து வைத்துள்ள பணத்தை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டதை அடுத்து பிரணவிகாவை வங்கிக்கு அழைத்து சென்று வங்கி ஊழியர்கள் முன் உண்டியல் உடைத்து சேமிப்பு பணத்தை வங்கியில் செலுத்தியதாக தெரிவித்தார்.

சேமிப்பு பழக்கம் கொண்ட பிரணவிகா தனது தங்கைக்கும் தனக்கும் பட்டு புடவை வாங்க சேமித்த பணத்தை வழங்கி உள்ளதாகவும் அப்போது தெரிவித்தார்.மேலும் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது தான் 500 ரூபாய் முதலமைச்சரின் நிவரண நிதிக்கு அனுப்பி வைத்தபோது அதற்கான பாராட்டு சான்றிதழை பிரணவிகாவிடம் காண்பித்ததும் அதை வியப்புடன் பார்த்ததாகவும் அதுவும் ஒரு உந்துகோலாக இருந்திருக்கலாம் என்றார்.

Tags:    

Similar News