கோவையில் கூண்டு வரை வந்தும் சிக்காத சிறுத்தை: போராடும் வனத்துறை

கோவையில், கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை அச்சுறுத்தி வருகிறது.

Update: 2022-01-20 05:30 GMT

சிசிடிவியில் பதிவான சிறுத்தை

கோவை மாவட்டம்,  குனியமுத்தூர், சுகுணாபுரம்,கோலமாவு மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில்,  கடந்த திங்கட்கிழமை சுகுணாபுரம் வாளையாறு சாலையில் உள்ள பாழடைந்த குடோனில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த பாழடைந்த குடோனை வலை கொண்டு மூடிய வனத்துறையினர் குடோனின் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து கூண்டுகளில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து அதனைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஐந்து காமிராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து நான்காவது நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், இன்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

அதில்,  அதிகாலை அளவில் சிறுத்தை குடோனுக்குள் உலா வருவதும், கேமிராவை உற்றுபார்ப்பதும், கூண்டின் அருகே சென்றுவிட்டு திரும்புவதும் பதிவாகி உள்ளது. கடந்த மூன்று தினங்கள் இரவு பகலாக வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருந்தும் சிறுத்தை கூண்டுக்குள் அகப்படாமல் போக்கு காட்டி வருகிறது.

கூண்டுக்கு அருகில் வரும் சிறுத்தை, புத்திசாலிதனமாக அப்படியே திரும்பி செல்வதும், குடோனைவிட்டு வெளியேற இடம் தேடுவதுமாக உலா வருகிறது. இந்த சிறுத்தை, வனத்தில் இருந்து மற்றொரு பலம் வாய்ந்த சிறுத்தையால் விரட்டபட்டிருக்கலாம் என கூறும் வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தால் குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி சிறுத்தை காயமடைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.   அதனை கூண்டிலேயே பிடிக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News